''வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்'' - ஆர்.பி. உதயகுமார் சாடல்

By என்.சன்னாசி

மதுரை: அதிமுக கொள்கை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியுமில்லை என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் ஆண்டிபட்டி, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, ராமையாபட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. பூத்கமிட்டியை சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் துரைப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: ''தமிழ்நாட்டில் டெங்கு அதிகரிகிறது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட கண்டனத்தை அடுத்து தற்போது 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடக்கும் என சுகாதார அமைச்சர் கூறுகிறார். சமீப காலமாக முதல்வர் ஸ்டாலின் வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில், தன்னை மறந்து அவதூறாக பேசுகிறார். அதிமுகவுக்கு கொள்கை கிடையாது, கொள்கை சார்ந்த முடிவுகளை எடுப்பதில்லை என அவர் தனது இயலாமையை வார்த்தைகளாக கொட்டுகிறார்.

திமுகவை உருவாக்கியவர் அண்ணா. அவர், தலைவர், தொண்டர் உறவை அண்ணா - தம்பி உறவாக வளர்த்தெடுத்தார். அதற்கு முன்பெல்லாம் மிட்டா மிராசு, ஜமீன்தார்கள், ஆலை அதிபர்கள், பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியல் அங்கீகாரமும், அதிகாரமும் பெற முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையை மாற்றி ஓலை குடிசையிலே இருக்கிறவர்களை சட்டமன்றத்தில் குரல் ஒலிக்கச் செய்தவர் அண்ணா. அவரது கொள்கையை குழி தோண்டி புதைத்துவிட்டு, தனக்கு பிறகு பிள்ளைகள் கையில் அதிகாரம் என்ற நிலையை உருவாக்குகின்றனர். அதிமுகவில் ஜனநாயகம் இருக்கிறது. சபாநாயகர் தனபாலுக்கு எழந்து கும்பிடுகிற வாய்ப்பைக் கொடுத்தவர்ஜெயலலிதா.

இந்த வாய்ப்பு சமதர்மத்தின் அடையாளமாக ஜனநாயக ஆணி வேராக உள்ளது. 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து மக்களுக்கு சேவையாற்றிய கட்சி அதிமுக. தமிழக முதல்வர் ஸ்டாலின் அளவோடு பேச வேண்டும். வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசினால், பொதுச் செயலாளரின் அனுமதியை பெற்று, தமிழக முழுவதும் மக்களை திரட்டி போராட்டம், உண்ணாவிரதம் நடத்துவோம். காந்தி ஜெயந்தியை யொட்டி நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வளர்ச்சிக்கான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். டெங்கு பாதிப்பை தடுக்க, கொசுக்களை ஒழிக்கவும் தீர்மானம் போடவேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE