குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் பகுதியில் பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை பேருந்து அடியில் சிக்கியிருந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலா பேருந்தில் 61 பேர் சுற்றுலா வந்தனர். அவர்கள், உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, ஞாயிறு மாலை கோவைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் உதகையில் இருந்து குன்னூர் மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம் சென்றனர். பேருந்து மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த பேருந்து சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
பேருந்தை நிறுத்திய மரம்: 30 அடியில் இருந்த ஒரு மரம் பேருந்து 150 அடி பள்ளத்தில் உருண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தியது. இதனால் பலர் உயிர் தப்பினர்.
» அஞ்சலி: பயாஸ்கோப்காரரின் மரணம்
» கலைவெளிப் பயணம் - 1: வண்ணங்களின் மாய வசீகரமும் மந்திர அதிர்வுகளும்
மீட்பு பணி: பேருந்துக்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், மீட்பு பணியை துரிதப்படுத்தினர். சாலையில் இருந்து கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு துறையினர், பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
9 பேர் பலி: அங்கு சிகிச்சை பலனின்றி கலா(42) மூக்குத்தி(67), கௌசல்யா(29), தங்கம் (40), ஜெயா (50), நித்தி கண்ணா(15), முருகேசன்(60), இளங்கேஷ்(67) ஆகிய பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை பேருந்து அடியில் சிக்கியிருந்த மூதாட்டி பாண்டிதாய் சடலமாக மீட்கப்பட்டார்.
மீதமுள்ள 53 பயணிகளில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 15 பேர் படுகாயங்களுடன் உதகை, மேட்டுப்பாளையம் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது,’விபத்தில் சிக்கியவர்கள் தென்காசியில் இருந்து கடந்த 28-ம் தேதி கேரள மாநிலம் குருவாயூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு புறப்பட்டு உள்ளனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு உதகைக்கு வந்து இருக்கின்றனர். இங்கிருந்து கோவை மருதமலைக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது’ என்றனர். சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பயணிகள் பலியான சம்பவத்தில் அரசு முழு வீச்சில் செயல்பட்டதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார்.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர், குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பேருந்து மீட்பு பணி: இந்நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.