பண மோசடி வழக்கு | அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் ஏற்கெனவே 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

அதில், செந்தில் பாலாஜி மற்றும்அவரது சகோதரர் அசோக்குமார், நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்ட 46 பேர் மீது நம்பிக்கை மோசடி, பண மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான 3 வழக்குகள் மீதான விசாரணை, சென்னை எம்.பி.,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்னிலையில், மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் சிலரை விசாரிக்க இன்னும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை அக். 5-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE