விருதுநகர்: “எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதை தாங்கக் கூடிய சக்தி, தமிழகத்துக்கு உள்ளது. பாதிப்பு ஏற்படாமல் சரிசெய்யும் வலிமையும் தமிழக அரசுக்கு உள்ளது” என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில்,“பருமழை தொடர்பாக தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களை அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு பேரிடர் மீட்பு தொடர்பாக அனைத்துத் துறை உயர் அதிகாரிகளையும் கூட்டி கூட்டம் நடத்தி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதை தாங்கக் கூடிய சக்தி, தமிழகத்துக்கு உள்ளது. பாதிப்பு ஏற்படாமல் சரிசெய்யும் வலிமையும் தமிழக அரசுக்கு உள்ளது. சென்னையில் வேளச்சேரி பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. அப்பகுதியில் மாநகராட்சி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புயல் வரவேண்டும். பாதிப்பில்லாமல் வரவேண்டும். புயல் வந்தால்தான் நமக்கு மழை வருகிறது. தமிழகத்துக்கு மழை தேவை இருக்கிறது. அனைத்து நீர்த் தேக்கங்களும், நீர்நிலைகளும் நீரின்றி உள்ளன. எனவே, புயல் வேண்டும். அது மக்களை பாதிக்காத புயலாக இருக்க வேண்டும்” என்றார்.