விதிகள் மீறி இயக்கப்பட்ட ‘சிறப்பு பேருந்து’ பழுது: சுடுதண்ணீர் பீய்ச்சி அடித்ததால் தி.மலை பயணிகள் ஓட்டம்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: சட்ட விதிகளை மீறி, விழுப்புரம் - திருவண்ணா மலை இடையே பவுர்ணமி சிறப்பு பேருந்து என கூறி இயக்கப்பட்ட நகரப் பேருந்தில் (டவுன் பஸ்) கொதி நிலையில் இருந்த ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்ற முயன்றபோது, சுடு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

பண்டிகை காலங்கள், கோயில் விழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் அல்லது வழிபாட்டுத் தலங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் செல்கின்றனர். இவர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக, சாதாரண கட்டணத்தை விட கூடுதலாக 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வசூல் செய்யப்படுகிறது. தொலைதூரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள்(பச்சை நிறம், நீலம் மற்றும் மஞ்சள் நிறம்) பற்றாக்குறையால், நகரப் பேருந்துகள் (டவுன் பஸ்) அதிகளவில் இயக்கப்படுகின்றன.

தொலைதூர (40 கி.மீ., முதல்) பேருந்துகளின் தகுதி என்பது கேள்விக்குறியாக இருக்கும்போது, நகரப் பேருந்துகளின் தகுதியை அனைவரும் எளிதாக உணர்ந்துவிடலாம். தொலைதூரம் இயக்குவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ள நகரப் பேருந்துகளை, சிறப்பு பேருந்துகளாக இயக்கி மக்களின் உயிருடன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் விளையாடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதற்கு சாட்சியாக, திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்துக்கு ‘பவுர்ணமி சிறப்பு பேருந்து’ என்ற பெயரில் இயக்கப்பட்ட நகரப் பேருந்து (டிஎன்-21-என்-0927) பழுதடைந்து, பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துநரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதை கூறலாம்.

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு நகரப் பேருந்து நேற்று காலை புறப்பட்டது. வேட்டவலம் அருகே வந்தபோது பேருந்தின் இன்ஜின் மற்றும் ரேடியேட்டர் பகுதி கொதித்துள்ளது. வேட்டவலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நகரப் பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து, ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்ற, அதன் மூடியை கழற்றியபோது, கொதி நிலையில் இருந்த தண்ணீர், ‘ஆர்ட்டீஷியன்’ ஊற்று போல் ஊற்றியது.

இதனால், பேருந்து உள் பகுதியில் வெப்பம் வீசியது. பேருந்து உள்ளே இருந்த சுமார் 20 பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். கொதிநீர் பீய்ச்சி அடித்ததில், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சுடுகாயம் ஏற்பட்டது. மேலும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த 5 பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றப்பட்ட, நகரப் பேருந்து இயக்கப்பட்டது. ஆவூர், கரிப்பூர், தலவாக்குளம் ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இப்படியாக, சுமார் 15 கி.மீ., தொலைவுக்கு நகரப் பேருந்து இயக்கப்பட்டது. திருவண்ணாமலை அருகே வேளானந்தலில் வந்தபோது, நகரப் பேருந்தை இயக்குவது தடைபட்டது. இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மற்றொரு பேருந்தில், பயணிகளை நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜ் கூறும்போது, “நகரப் பேருந்துகளை (டவுன் பஸ்) 35 கி.மீ., முதல் 40 கி.மீ., வரை இயக்கலாம். கூடுதலாக இயக்குவது சட்டப்படி தவறு. சென்னையில் உள்ள பேருந்துகள் முதல் மாவட்டங்களில் உள்ள நகரப் பேருந்துகள் வரை, சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. மக்களின் நலன் கருதி என கூறி இயக்குவது, அவர்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், தொழிலாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

தொடர்ந்து, இயக்கப்பட்டதால் ரேடியேட்டர் கொதிநிலைக்கு சென்றிருக்கலாம். பேருந்துகளை பராமரிப்பது கிடையாது. காலாவதியான சாலையில் இயக்க தகுதியற்ற பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இன்ஜின் ‘ரீ போர்’செய்துவிட்டோம் என அதிகாரிகள் கூறுகின்றனர். சாலையில் 6 லட்சம் கி.மீ., இயக்கிவிட்டால், பேருந்தின் ஆயுட்காலம் முடிந்துவிடுகிறது. ஆனால், 6 லட்சம் கி.மீ., கடந்தும் பல பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. தொலை தூரத் துக்கு தகுதியான பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE