பாஜக தலைவர்களை சந்திக்க அண்ணாமலை நாளை டெல்லி பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி முறிவால், அடுத்தகட்ட திட்டமிடல் தொடர்பாக அக். 3-ம் தேதி சென்னையில் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு முன்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, அக். 1-ம் தேதி (நாளை) சென்னையில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை டெல்லி செல்ல இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். டெல்லியில், அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை சந்தித்து, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாகவும், அதிமுக வெளியேறிய நிலையில், யாருடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு, தேசிய தலைவர்களின் கருத்தை பெற்று, அதன்படி சென்னையில் நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்க இருப்பதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த பிறகு, அண்ணாமலையின் முதல் டெல்லி பயணமாக இருப்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE