தடுப்பூசி செலுத்திய குழந்தை உயிரிழப்பு? - பல்லடம் அருகே பெற்றோர் புகார்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: பல்லடம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த தம்பதி கபின், ஏஞ்சலின் ரூபிசியா. காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

சுஜன் என்று பெயர் கொண்ட அந்த குழந்தைக்கு, புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முத்தாண்டம் பாளையத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, படுக்கையில் இருந்து நேற்று காலை சுஜன் எழவில்லை. இதில் சந்தேகமடைந்த தம்பதி, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பல்லடம் போலீஸார் சென்று, குழந்தையின் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ் குமார் கூறும்போது, "முத்தாண்டம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அனைவரும் நலமாக உள்ளனர். சம்பந்தப்பட்ட குழந்தைக்கு இரவு தாய் பால் புகட்டும்போது,

ஏற்பட்ட மூச்சுத் திணறலில் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனினும், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE