அஞ்சலி | வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் ‘பட்டினி இல்லா இந்தியா’ கனவும், பசுமைப் புரட்சி சாதனைகளும்!

By செய்திப்பிரிவு

சென்னை: புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், இந்திய ‘பசுமைப் புரட்சி’யின் சிற்பியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் வியாழக்கிழமை காலை 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 98.

எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்க்கைக் குறிப்பு: ஆகஸ்ட் 7, 1925-இல் கும்பகோணத்தில் டாக்டர் எம்.கே சாம்பசிவன் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பார்வதி தங்கம்மாள் ஆகியோருக்கு பிறந்தார், அங்கு பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். விவசாய அறிவியலில் அவருக்கு இருந்த தீவிர ஆர்வம் மற்றும் சுதந்திர இயக்கத்தில் அவரது தந்தையின் பங்கேற்பு மற்றும் மகாத்மா காந்தியின் செல்வாக்கு அவரை பாடத்தில் உயர் படிப்பைத் தொடர தூண்டியது. கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் (தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்) இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார்.

“டாக்டர் சுவாமிநாதன் இந்தியாவின் பல முன்னாள் பிரதமர்களுடனும், மாநிலத் தலைவர்களுடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றிய ‘பசுமைப் புரட்சி’யின் வெற்றிக்காக, உணவு உற்பத்தியில் குவாண்டம் முன்னேற்றத்துக்கும், “பட்டினி இல்லா இந்தியாவுக்கும் வழிவகுத்தது. நிலையான விவசாயத்துக்கான அவரது வாதங்கள் அவரை நிலையான உணவுப் பாதுகாப்புத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட உலகத் தலைவராக்கியது. உயர் விளைச்சல் தரும் கோதுமை வகைகளை உருவாக்குவதில் பிரபல அமெரிக்க பண்ணை விஞ்ஞானியும் 1970 நோபல் பரிசு பெற்றவருமான நார்மன் போர்லாக் உடன் நெருக்கமாக பணியாற்றினார்

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், எம் எஸ் சுவாமிநாதன் என்று பிரபலமாக அறியப்பட்டவர், புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின் ‘பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பியுமான எம்.எஸ்.சுவாமிநாதன். பயிற்சியின் மூலம் தாவர மரபியல் நிபுணரும், சென்னையிலுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் செயல்பட்டவர்.

உலகளாவிய உணவு முறைகளின் நிலைத்தன்மையுடன், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்தல். விவசாயிகளுக்கான இந்திய அரசின் தேசிய ஆணையத்தின் தலைவராகவும், அறிவியல் மற்றும் உலக விவகாரங்களுக்கான பக்வாஷ் மாநாடுகளின் தலைவராகவும், உணவுப் பாதுகாப்புக்கான உலகக் குழுவின் (CFS) உயர்நிலை நிபுணர் குழுவின் (HLPE) தலைவராகவும் பணியாற்றியவர்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (ராஜ்யசபா), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநர். இந்தியாவின் பசுமைப் புரட்சியில் அவரது தலைமைத்துவத்துக்காக முதல் உலக உணவுப் பரிசு மற்றும் பத்ம விபூஷன், ராமன் மகசேசே விருது உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர்” என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அவருக்கு சவுமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன் மற்றும் நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி மீனா சுவாமிநாதன்.

சிறப்புக் குறிப்புகள்: கும்பகோணத்தில் 1925-ல் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சம் இவரை மிகவும் பாதித்தது. வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். கோவை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள, புத்தகங்களை எழுதியுள்ளார். அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954-ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது.

1960-களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. ‘இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்’ என்று பல நாடுகள் கூறின. இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.

சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்தார். நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார். உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கினார். ‘பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு’ என்பார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை 1988-ல் நிறுவினார்.

இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர். கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

புகழஞ்சலிக் குறிப்புகள்:

> “பசுமைப் புரட்சியின் சிற்பி... பலருக்கு வழிகாட்டி!” - எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு முர்மு, மோடி, கார்கே புகழஞ்சலி

> ''தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு'' - எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு முதல்வர் புகழஞ்சலி

> “பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய போற்றுதலுக்கு உரியவர்” - இபிஎஸ்

> “விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணை புரிந்தவர்” - கே.எஸ்.அழகிரி

> “விவசாய ஆராய்ச்சி உலகின் சிறந்த வழிகாட்டி!” - முத்தரசன்

> “இந்திய தன்னிறைவுக்கு முக்கியப் பங்கு வகித்தவர்!” - தினகரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE