'மாமன்னன்' பட பாணியில் அமைச்சர் பொன்முடி வீட்டில் திமுகவினர் நடத்தப்பட்டனரா? - முன்னாள் எம்எல்ஏ விளக்கம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் சில விஷயங்களை வெளியே சொல்வது தவறு என முன்னாள் திமுக எம் எல் ஏ புஷ்பராஜ் கூறியுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 1-ம் தேதி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாநில ஆதிதிராவிடர் நல அணியும், சிறுபான்மையினர் அணியும் இணைந்து விழுப்புரம் மத்திய மண்டலம் சார்பில் பட்டிமன்றத்தை நடத்த உள்ளன. இதற்கான ஆலோசனைகளைப் பெற ஆதி திராவிடர் நலக் குழு இணை செயலாளர்கள் விபி ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, அவர்களை நிற்கவைத்து பேசி அனுப்பியதாக புகைப்படம் ஒன்று நேற்று வைரலானது. அதில், "இருக்கை காலியாக இருந்தும் அமர வைக்கப்படாதது ஏன்? என மாமன்னன் பட பாணியில்" என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் கூறியதாவது: "கடந்த 26ம் தேதி நானும், வி.பி ராஜனும், அமைச்சர் பொன்முடியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது அவர் காலில் காயமடைந்து இருந்ததால் கட்டுப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அதை வி.பி ராஜன் குனிந்து பார்த்து விசாரித்தபோது எடுக்கப்பட்ட படம் அது. அமைச்சர் வீட்டில் உணவருந்திவிட்டுதான் நாங்கள் வந்தோம். சில விஷயங்களில் உண்மையை தெரிந்து கொள்ளாமல் வெளியே சொல்வது தவறு. இதற்கு மேல் என்னிடம் விளக்கம் கேட்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE