தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி: முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறுஅரசுப் பணிகளுக்கு 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுப் பணிகளில் குரூப்-4 பிரிவில் உள்ள 10,205 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு நடத்தப்பட்டது. இதில் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.

அதில் இருந்து தகுதிவாய்ந்த 5,278 இளநிலை உதவியாளர்கள், 3,339 தட்டச்சர்கள், 1,077 சுருக்கெழுத்தர்கள், 425 கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ),67 வரி தண்டலர்கள், 19 கள உதவியாளர்கள் என மொத்தம் 10,205 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், அவர்கள் அனைவருக்கும் பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக, 12 பேருக்கு நியமன ஆணைகளைமுதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது: அரசு ஊழியர்களில் தன்னலம் கருதாமல் மக்களுக்காகவே வாழ்பவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ‘‘உயிரிழப்பதற்கு முன்பு உறுப்புதானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடத்தப்படும்’’ என்று கடந்த 23-ம் தேதி அறிவித்தேன். மனிதநேயத்துடன் உறுப்பு தானம் செய்து, அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர், தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த அரசு ஊழியர் வடிவேலு. இந்த செய்தி, உறுப்பு தானம் குறித்து மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அரசு ஊழியராக இருந்த வடிவேலு காலத்துக்கும் மக்களால் நினைவுகூரப்படுவார்.

ரூ.95 லட்சத்தில் தொழில்நுட்ப வசதி: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். இதனால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, ரூ.95 லட்சம் செலவில் ‘ஆன்-ஸ்கிரீன் எவாலுவேஷன் லேப்’ என்ற உயர் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மத்திய அரசுத் துறை காலி பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக கடந்த 2021 அக்.12-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை தமிழிலும் நடத்த கோரிக்கை விடுத்து, கடந்த டிச.26-ம் தேதி கடிதம் எழுதினேன். இதை ஏற்று, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)நடத்தும், 10 மற்றும் 12-ம் வகுப்பு தரத்தில் பன்முகப் பணியாளர் பணிக்கான தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் என்ற இலக்கை தாண்டி, 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணிக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கும் திட்டம் வரும் அக்டோபரில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 12,576 பேருக்கும், தற்போது 10,205பேருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 17,000பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

புதிய ஊழியர்களுக்கு அறிவுரை: லட்சத்தில் ஒருவராக தேர்வாகியுள்ள உங்களுக்கு, ‘மக்கள் சேவை’ என்பது மட்டுமே லட்சியமாக இருக்க வேண்டும். மக்கள் உங்களிடம் கோரிக்கையுடன் வரும்போது, எனது பிரதிநிதியாக இருந்து மக்களை எளிமையாக அணுகி, அவர்களது குறைகள், பிரச்சினைகளை தீர்த்துவைத்து, அரசின் திட்டங்கள், கொள்கைகளை அவர்களிடம் சேர்த்து பயனடைய செய்ய வேண்டும். உங்கள் செயல்பாட்டை பொருத்துதான் எனக்கு நல்ல பெயர், கெட்ட பெயர் அமையும்.

கோரிக்கை மனுவுடன் உங்களிடம் வருபவர்களை முதலில் உட்கார வைத்து பேசுங்கள். அவர்களது பிரச்சினை, கோரிக்கையை காது கொடுத்து கேளுங்கள். வந்தவர்களுக்கு அதுவே பெரிய நம்பிக்கை, மனநிறைவை தரும். ‘இது உங்கள் அரசுதான்’ என்பதை, உங்களை சந்திக்க வருபவர்களிடம் உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஸ், தலைமைச் செயலர்சிவ்தாஸ் மீனா, மனிதவள மேம்பாட்டு துறை செயலர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE