கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான இருவரிடம் என்ஐஏ விசாரணை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இருவரை, காவலில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு இன்று (செப்.27) அழைத்து வந்து விசாரித்தனர்.

கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான், முகமது தவுபீக்(25), உமர் பாரூக்(28), பெரோஸ்கான்(28), ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை, துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ்(25), உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன்(36) ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், முகமது அசாருதீன் ஐஎஸ் ஆதரவு வழக்கு தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கார் வெடிப்பு வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசாருதீனை முறைப்படி கைது செய்தனர்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன் ஆகியோரை கடந்த 22-ம் தேதி என்ஐஏ அதிகாரிகளில் தங்களது காவலில் எடுத்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதன் பின்னர், இருவரையும் அழைத்துக் கொண்டு என்ஐஏ அதிகாரிகள் இன்று (27-ம் தேதி) கோவைக்கு வந்தனர். முகமது இத்ரிசை ஜி.எம்.நகரில் உள்ள அவரது வீட்டுக்கும், முகமது அசாருதீனை அன்புநகரில் உள்ள அவரது வீட்டுக்கும் விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரித்தனர். தொடர்ந்து இருவரையும் அவர்கள் படித்த அரபிக் பாடசாலைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற இடங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் ஜிபிஎஸ் மூலம் தொழில்நுட்ப பதிவும் செய்தனர். சுமார் இரண்டைரை மணி நேர விசாரணைக்கு பின்னர் இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திரும்ப தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE