ஓபிஎஸ், அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001-2006-ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி 2012-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இந்த நிலையில், மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபின், பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக அளித்த அனுமதியை திரும்பப் பெற்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012-ல் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ், அவரது குடும்பத்தினர் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறையிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இதையடுத்து வழக்கு ஆவணங்களை ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE