மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வில் தமிழக இளைஞர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் இளைஞர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன்படி, தற்போது 9-ம் கட்டமாக வேலைவாய்ப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக்காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை நகர மண்ட அஞ்சல்துறை சார்பில், சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

விழாவில், அஞ்சல் துறை, வருவாய்த் துறை, நிதிச் சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், உயர்கல்வி போன்ற பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 156 பேருக்கு அவர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மத்திய அரசு 9-வது முறையாக இந்த வேலைவாய்ப்பு திருவிழாவை நடத்துகிறது.

வங்கித் துறை போன்றவற்றுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும்போது 100 நபர்களை தேர்வு செய்கிறோம் என்றால், அதில் 40 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும்போது, எஞ்சிய 60 பணியாளர்களை பிற மாநிலங்களை சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்புகிறோம். ஒருவேளை தமிழகத்திலிருந்தே 100 தகுதியான நபர்களும் கிடைத்தால், 100 இடங்களுக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு நிரப்பலாம். ஆனால், போதுமான பணியாளர்கள் உள்ளூரில் இருந்து கிடைக்காதபோது பிற மாநில மக்களை பணிக்கு அமர்த்துகிறோம்.

எனவே, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்பதன் மூலமே அதிக எண்ணிக்கையில் பணிகளைப் பெற முடியும்.

அகில இந்திய தேர்வுகளில் தேர்வாகும் நபர்களை இந்தியா முழுவதும் பணி நியமனம் செய்யலாம். அதில் தவறு இல்லை. தமிழ் பேசுவோர் இந்தி பேசும் மாநிலத்துக்குச் சென்றாலும், இந்தி பேசுவோர் தமிழகத்துக்கு வந்தாலும் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. எனவே,எந்த மாநிலத்துக்கு பணிக்கு செல்கிறோமோ, அந்த மாநில மொழியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சரிவர செய்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். பணியில் சேர்பவர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொண்டு, அரசின் திட்டங்கள், மக்களைச் சென்றடைய உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

விழாவில், தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் ஜே.சாருகேசி, சென்னை நகரமண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன், வருமான வரித்துறைமுதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர், ஜிஎஸ்டி முதன்மைதலைமை ஆணையர் மண்டலிக்கா னிவாஸ், இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் எஸ். எல். ஜெயின், சுங்கத் துறை தலைமை ஆணையர் ராம்நிவாஸ் உள்ளிட்டோர் கலந் துக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE