வாரிசு சான்றிதழ் தொடர்பான அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மனைவியை இழந்து குழந்தைகள் இல்லாத நிலையில் மரணமடையும் ஆணின் சகோதர, சகோதரிகளுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க மறுக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வாரிசு சான்றுகள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விதிகளை வகுத்து அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தனது சகோதரர் சந்தானத்துக்கு வாரிசு இல்லை. அவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில், அவரது சொத்தை மீட்கவும், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் தனது சகோதர, சகோதரிகளை வாரிசுகளாக அறிவித்து சான்று வழங்கக் கோரி அளித்த விண்ணப்பம், 2022 அரசாணையை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்டது.

மேலும், குழந்தைகள் இல்லாமல் மனைவியும் இல்லாத ஆணின் சகோதரர் சகோதரிகளை வாரிசுகளாக இந்த அரசாணையில் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். வீரராகவன், தமிழக அரசின் அரசாணை இந்து வாரிசுரிமை சட்டத்துக்கு விரோதமாக அமைந்துள்ளது. எனவே, இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE