சென்னை: தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக தொழில் துறை ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி நிர்மல்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழக தொழில் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
குடிமைப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னி பணியிட மாற்றம் செய்யப்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (பயிற்சி) துறையின் முதன்மைச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி ஹர்சகாய் மீனா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, குடிமைப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மைச் செயலாளராக நியமித்து, உத்தரவிடுவதாக அதில் தெரிவித்துள்ளார்.