வந்தே பாரத் ரயிலுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி/ சென்னை: வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்த அதே நேரத்தில், இந்த ரயில்கள் இயக்கப்படும் அனைத்து நிலையங்களிலும் கேக் வெட்டியும், இனிப்புகளை பரிமாறியும் தொடக்க விழா உற்சாகமாக நடந்தது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்த விழாவில், தெலங்கானா - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர்
எல்.முருகன், ஞானதிரவியம் எம்.பி., எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப், முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் ஆளுநர் தமிழிசை, மதுரை வரை பயணித்தார். ‘‘வந்தே பாரத் ரயில் மூலம் நெல்லையில் இருந்து மதுரைக்கு
2 மணி நேரத்தில் சென்றுவிட முடியும். பிரதமருக்கு மனமார்ந்த நன்றி’’ என்று அவர் கூறினார்.

நெல்லையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் என அனைத்து நிலையங்களிலும் பொதுமக்கள், ரயில்வே அதிகாரிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

நேற்று இரவு சென்னை எழும்பூர் வந்தடைந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.

விஜயவாடாவில் இருந்து தெனாலி, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா வழியாக நேற்று இரவு சென்னை சென்ட்ரல் வந்த வந்தே பாரத் ரயிலுக்கு அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர் நிலையங்கள் உட்பட வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சென்னை ரயில்வே கோட்ட உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE