தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று (செப். 25) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது அல்லது மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

திருத்தணியில் 13 செ.மீ.: செப். 24-ம் தேதி (நேற்று) காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24மணி நேரத்தில் பதிவான மழைஅளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 13 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 11 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 10 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 9 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கீழ்பென்னாத்தூர், விழுப்புரம் மாவட்டம் வளத்தி, திண்டிவனம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வரும் 27, 28-ம் தேதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மேற்கூறிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE