மல்லப்பாடி - மரிமானப்பள்ளி பாம்பாற்றின் குறுக்கே பாலம் - 75 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுமா?

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மல்லப்பாடி - மரிமானப்பள்ளி பாம்பாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ளது மல்லப்பாடி ஊராட்சி. மல்லப்பாடி கிராமத்தில் இருந்து மரிமானப்பள்ளி, காவேரி நகர், வி.கே.நகர், நாயுடு கொட்டாய், முஜூநாயுடு கொட்டாய் மற்றும் ஜிட்டிகானூர், முண்டிகானூர், மஸ்திகானூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் பாம்பாற்றினை கடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், இந்த பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராம மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக தேர்தல் காலங்களில் இங்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தருவதாக உறுதியளிக்கின்றனர். அதன்பிறகு கண்டுகொள்வதில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து காவேரி நகரைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் கூறும்போது, எங்கள் ஊரில் இருந்து பர்கூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிக்கு பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், விவசாய பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள், பல்வேறு பணிகளுக்குச் செல்பவர்கள் பாம்பாறு ஆற்றில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மழைக்காலங்களில், ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும். அப்போது, இவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்படும். அவ்வாறான நேரங்களில் சிப்காட், அச்சமங்கலம் கூட்ரோடு வழியாகவும் அல்லது கப்பல்வாடி, சிகரலப்பள்ளி, சக்கில்நத்தம், மல்லப்பாடி வழியாக பர்கூர் நகருக்கு சுமார் 10 முதல் 15 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.

இது வழக்கமாக செல்லும் தூரத்தைவிட 3 மடங்கு அதிகமாகும். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, பாம்பாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, பல்வேறு மனுக்கள் அளித்து வருகிறோம்.

ஒவ்வொரு முறையும் இங்கு ஆய்வு செய்யும் அலுவலர்கள், அதன் பிறகு கண்டுகொள்வதில்லை. கிணற்றில் போடப்பட்ட கல்லாக எங்கள் கோரிக்கை உள்ளது. எனவே, தொடர்புடைய அலுவலர்கள் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE