புரிதல் இல்லாமல் ‘நீட்’டை விமர்சிக்க வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: புரிதல் இல்லாமல் நீட் தேர்வை விமர்சிக்கக் கூடாது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ‘பூஜ்யம்’ மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண், பூஜ்யம் பெர்சன்டைல் என்றால்என்ன? என்பது குறித்த புரிதல் முதலில் இருக்க வேண்டும்.

நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை. நீட் தேர்வில் வெற்றிபெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம்.

நீட் தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை வழங்கப்படும். அதற்கான இடங்கள் நிரம்பிய பின்னர், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாகஉள்ள இடங்களைப் பயன்படுத்திக் கொள்ள இந்த முறை உதவும். இதைப்பற்றிய புரிதல் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் குழப்பி மாணவச் செல்வங்களிடம் தவறான எண்ணங்களைக் கொண்டு சேர்க்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது இந்த முறையை விமர்சிப்பவர்களுக்கு புரிதல் மிக அவசியமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE