முதல்வரை கே.பி.அன்பழகன் அவதூறாக பேசியதாக எஸ்.பி.யிடம் தருமபுரி திமுக நிர்வாகிகள் புகார் மனு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: முதல்வரையும், தமிழக அரசையும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தருமபுரி மாவட்ட திமுக செயலாளர்கள் இன்று (செப்.21) எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர்.

கடந்த 16-ம் தேதி, தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரூரில் நடத்தப்பட்டது. அரூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பசுபதி தலைமையில் அரூர் கச்சேரி மேடு பகுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பங்கேற்று பேசினார்.

இந்நிலையில், ‘இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலினையும், தமிழக அரசையும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவதூறாகவும், கண்ணியக் குறைவாகவும் பேசினார். எனவே, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தி ஆதாரங்கள் என சிலவற்றை அளித்து, தருமபுரி மாவட்ட திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளரான முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி மற்றும் இரு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதமிடம் புகார் மனு அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE