பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்புதெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்குவழங்கப்பட வேண்டும் என்றகருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடும் பின்னர் அதையே 2016-ல் 50 சதவீதஇடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண் இனத்துக்கே பெருமை சேர்த்தார். அதேபோல் 1991-ல் முதன்முதலாக ஆட்சிஅமைத்த போதுதான் அவருடன்31 பெண்‌ சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதற்கும் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அதிமுக சார்பில் வரவேற் கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பெண்களுக்கு 33 சதவீதஇடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தேமுதிக வரவேற்கிறது. இது ஒட்டுமொத்த பெண் இனத்துக்கு கிடைத்த வெற்றி. இதைச் செயல்படுத்தும் வகையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் எனமத்திய அரசை கேட்டுக் கொள் கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள் தொகைமற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதோடு, இட ஒதுக்கீடுமசோதாவின் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை முழு மனதோடு வரவேற்கிறேன். அதேநேரம், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதிகள்வரையறைக்குப் பிறகே அமலுக்குவரவுள்ள இந்த ஒதுக்கீட்டை, விரைந்து செயல்படுத்த வேண்டும்.மாநிலங்களவை, சட்டமேலவையிலும் வழங்கும் வகையில் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE