பட்டியலின மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதும் ஒருவித வன்கொடுமையே: ஐகோர்ட்

By கி.மகாராஜன் 


மதுரை: “பட்டியலின ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதும் ஒருவித வன்கொடுமையே” என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த ராஜஜோதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் படிப்பில் (2013 - 2016) சேர்ந்து, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் விட்டேன். பின்னர் வழிகாட்டி ஆசிரியரை மாற்றி பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை தொடர பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். இளநிலை ஆராய்ச்சியாளர் படிப்புக்கான உதவித் தொகை கேட்டு முறைப்படி விண்ணப்பித்தேன். இதுவரை உதவித் தொகை வரவில்லை.எனவே எனக்கு உதவித் தொகை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது 4 வாரத்தில் உதவித் தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகும் உதவித் தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜரானார். அப்போது அவர், பல்கலைக்கழகத்தில் போதுமான நிதி இருப்பு இல்லை. இதனால் உதவித் தொகை வழங்கப்படவில்லை. விரைவில் மாணவிக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்புகளில் பட்டியலின மாணவ, மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில் சேர்கின்றனர். கல்வி உதவித் தொகையை தாமதம் செய்வதன் மூலம் மாணவர்கள் மீது வன்கொடுமை நடைபெறுகிறது. பட்டியல் சமூக ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதும் வன்கொடுமை தான். எனவே பதிவாளர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஏன் உத்தரவிடக் கூடாது?.

இதுபோன்ற உதவித் தொகை தான் சில மாணவர்கள் கல்வி கற்க பயன்படுகிறது. பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சொந்த பணத்தை கொடுக்கவில்லை. பட்டியலின மாணவி என்பதால் உதவித் தொகை மறுக்கப்படுகிறதா? உயர் நீதிமன்றங்களில் பட்டியலின நீதிபதிகள் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர். மனுதாரருக்கு செப். 22-க்குள் உதவித் தொகை வழங்க வேண்டும். விசாரணையை செப். 25-க்கு ஒத்திவைக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE