புதுச்சேரி நகராட்சியின் 12 லட்சம் முக்கிய ஆவணங்கள் அழியும் நிலையில்... பாதுகாக்க முன்வருமா அரசு?

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மொத்தம் 19.46 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. 2.44 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 230 கி.மீ. தொலைவுக்கு சாலை வசதியும், 319 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வசதியும் கொண்டுள்ளது. பாரம்பரியமிக்க புதுச்சேரி நகராட்சி பிரெஞ்சு ஆட்சியில் இருந்து பிறப்பு, இறப்பு, திருமண பதிவு ஆவணங்களை பாதுகாத்து சான்றிதழ்களை அளித்து வருகிறது.

ஆனாலும், புதுச்சேரி நகராட்சி பிறப்பு, இறப்பு அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் இல்லை. பல ஆண்டுகளாக மேரி கட்டிடத்தில் இயங்கி வந்த பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம் அந்தக்கட்டிடம் இடிந்து விழுந்த பிறகு, கடந்த 2014-ம் ஆண்டு குபேர் திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டது.

திருமண மண்டபத்தில் இயங்க எதிர்ப்பு கிளம்பியதைஅடுத்து, முதலியார்பேட்டை நகராட்சி கிளை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதுபதிவு அலுவலகமாக செயல்பட்டு வரும் முதலியார்பேட்டை கிளை பதிவு கட்டிடம் கடந்த 1923-ம் ஆண்டுகட்டப்பட்டது. அதன்நிலையோ மோசமாக உள்ளது.

இதுபற்றி நகராட்சி ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், "முதலியார்பேட்டை கிளை பதிவு கட்டிடத்தின் மேல்தளம் பலவீனமாக உள்ளது. காரைகள் பெயர்ந்து விழுகின்றன.

கனமழை பெய்யும் போதெல்லாம், மழைநீர் கொட்டி, கட்டிடம் தெப்பக்குளமாகி விடும். இதனால், ஆவணங்களை பாதுகாக்க முடியாத சூழல் உள்ளது. மழை பெய்தாலே, ஆவணங்களை ஒவ்வொரு இடமாக மாற்றி வைக்க வேண்டியுள்ளது.

நகராட்சி கிளை அலுவலகத்தில் ஒழங்கற்ற முறையில் சிதறி
கிடக்கும் ஆவணங்கள்.

ஆவணங்கள் மீது ஈரக்காற்று படிந்து விடுவதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழ்களை பாதுகாப்பதில் சிக்கல் உள்ளது. இடநெருக்கடியில் பழைய ஆவணங்களை நடந்து செல்லும் பாதையில் ஓரமாக அடுக்கி வைத்துள்ளோம்.

இவற்றை எலிகள் கடித்து குதறி விடுகின்றன. அத்துடன் கரையான்கள் பூச்சிகள் அரிப்பால் பல அழிந்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் முக்கிய ஆவணங்கள் சல்லடையாகி, பார்க்க இயலாத நிலையை எட்டி விடும்” என்கின்றனர்.

புதுச்சேரியை நன்கு அறிந்த முன்னாள் நகராட்சி உயர் அதிகாரிகள் கூறுகையில், "புதுச்சேரி நகராட்சியிடம் கடந்த 1880-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை 4 லட்சம் பிரெஞ்சு ஆவணங்கள் உள்ளன.

இதுமட்டுமின்றி 1931 ஆண்டு முதல் இது நாள் வரை 7 லட்சம் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் என மொத்தம் 12 லட்சம் அரிய ஆவணங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு ஆவணமும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உயிர் போன்றது.

செல்லும் வழியின்றி ஆவணங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இவை மறைந்தால் மீண்டும் கிடைக்காது. இவற்றின் பிரதி கிடைக்க வேண்டுமென்றால் பிரான்ஸ் நாட்டின் வடக்குப் பகுதிக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு செலவு செய்து, யாராலும் ஆவணங்களை பெற முடியாது.

ஆவணங்கள் காகிதங்களில் உள்ளதால் ஆயுள் குறைவாகவே உள்ளது. ஆவணங்களை, எந்த காலத்துக்கும் அழியாமல் பாதுகாக்கும் வகையில் ஸ்கேன் செய்து, கணினி பதிவாக்க வேண்டும். பூச்சிகள், கரையான்களிடம் இருந்து காக்க, வேதியியல் முறையை கையாண்டு பாதுகாக்க வேண்டும்.

மூல ஆவணங்களை பாதுகாத்து, அவற்றின் டிஜிட்டல் பிரதிகளை, தேவைக்கு ஏற்ப பெரிதுபடுத்தி பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் இவைகள் எந்த காலத்துக்கும் அழியாமல் இருக்கும்." என்று தெரிவிக்கின்றனர்.

பிரதமர் திறந்து வைத்த மேரி கட்டிடம் என்ன ஆனது? - "2014-ல் மேரி கட்டிடம் இடிந்து, அதன்பின் அது கட்டப்பட்டு, பிரதமர் மோடி திறந்து வைத்து இரண்டரை ஆண்டுகளாகி விட்டது. ஆனால் அது இன்று வரையிலும் மக்கள் பயன்பாட்டுக்கே வரவில்லை.

தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தும் பிரதமர் திறந்து வைத்த இக்கட்டிடத்தை கூட நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. நகராட்சி பதிவு அலுவலகத்துக்காக இந்தக் கட்டிடத்தை நிரந்தர கட்டிடம் என அறிவித்து ஆவணங்களை அரசு பாதுகாக்குமா?” என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE