திமுக எம்எல்ஏ மனு அடிப்படையில் வண்டிப்பாதையை அளவிட விவசாயிகள் எதிர்ப்பு: வட்டாட்சியர் நோட்டீஸுக்கு ஐகோர்ட் தடை

By கி.மகாராஜன் 


மதுரை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மனு அடிப்படையில் காற்றாலை நிறுவனங்களுக்கு வசதியாக வண்டிப்பாதையை அளவீடு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகளுக்கு வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஓ.லட்சுமணி நாராயணபுரத்தைச் சேர்ந்த ஜி.சோலையம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: விளாத்திக்குளம் மந்திக்குளத்தில் எங்களுக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களுக்கு விவசாயிகள் வண்டிப்பாதை வழியாக சென்று வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன. காற்றாலைகளுக்கு செல்லும் வாகனங்களால் விவசாய நிலங்களும், சாலை மற்றும் நீர் நிலைகளும் சேதமடைந்து வருகின்றன. இது தொடர்பாக விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்து அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்கண்டேயன் தூண்டுதல் பேரில் காற்றாலை நிறுவனங்களின் வசதிக்காக வண்டிப்பாதையை புல எண்களை அளவீடு செய்வதற்காக உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு 47 விவசாயிகளுக்கு வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வண்டிப்பாதை புல எண்களை அளவீடு செய்யக்கோரி மந்திக்குளத்தில் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் யாரும் விண்ணப்பிக்கவில்லை. விளாத்திக்குளம் எம்எல்ஏக்கு மந்திகுளத்தில் எந்த நிலமும் இல்லை. ஆனால் எம்எல்ஏ தனியார் காற்றாலை நிறுவனங்களுக்கு ஆதரவாக காற்றாலை வாகனங்கள் செல்வதற்காக வண்டிப்பாதை நிலத்தை அளந்து கொடுக்க வேண்டி மனு அளித்ததும், அந்த மனு அடிப்படையில் விவசாயிகளுக்கு வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியதும் சட்டவிரோதம்.

ஏற்கெனவே மந்திகுளம் ஊராட்சித் தலைவர் வண்டிப்பாதையை அளவீடு செய்யக்கோரி மனு அளித்தார். பின்னர் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக அந்த மனுவை ஊராட்சித் தலைவர் திரும்ப பெற்றார். தற்போது அதே காரணத்துக்காக எம்எல்ஏ மனு அளித்துள்ளார். எனவே வட்டாட்சியரின் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். அதுவரை நோட்டீஸை செயல்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். பின்னர் விளாத்திக்குளம் வட்டாட்சியரின் நோட்டீஸுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE