விருதுநகர் கலசலிங்கம் கல்வியியல் கல்லூரிக்கான ரூ.5 லட்சம் அபராதம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: அங்கீகாரம் இல்லாமல் 100 மாணவர்களை சேர்த்ததாக கல்வியியல் கல்லூரிக்கு விதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் அபராதத்தை ரத்து செய்து, அந்த மாணவர்களுக்கு 3 மாதத்தில் சிறப்பு தேர்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் கலசலிங்கம் கல்வியியல் கல்லூரியில் 2021-2022-ம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்தவும், கல்லூரி மாணவர்கள் 2021- 2022 ஆண்டிற்கான முதல் மற்றும் 2ம் பருவத்தேர்வு எழுத அனுமதி வழங்க தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி கல்லூரி செயலர் ஸ்ரீதரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அங்கீகாரம் பெறாமல் கல்வியியல் கல்லூரியில் நூறு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பருவத் தேர்வில் ஒரு பருவத் தேர்வு கூட எழுதவில்லை. இதனால் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. நூறு மாணவர்களையும் வேறு கல்லூரியில் சேர்க்க அரசு பரிசீலிக்க வேண்டும் என 12.4.2023-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. கல்லூரி சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.சிவசுப்பிரமணியன், இ.சோமசுந்தரம் ஆகியோர் வாதிட்டனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''கல்வியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தானதற்கு மாணவர்கள் காரணம் இல்லை. அதன் பிறகு கல்லூரி நிர்வாகம் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனால் 2021-2022-ல் 2 ஆண்டு கல்வியியல் படிப்பில் சேர்க்கப்பட்ட நூறு மாணவர்களுக்கும் சிறப்பு தேர்வு நடத்த வேண்டும். அந்த நூறு மாணவர்களுக்கும் 4 பருவத் தேர்வுகளையும் 3 மாதத்தில் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்த வேண்டும். அதன் பிறகு 2 மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். இந்த வழக்கில் மேல்முறையீடு மனு அனுமதிக்கப்படுகிறது. கல்லூரிக்கு அபராதம் விதித்தும், மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்க்கவும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE