ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னர் கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் மிரட்டி விரட்டியடித்தனர்.

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

பின்னர் திங்கட்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கக் கூடாது என துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டனர்.

இதனால், உயிருக்குப் பயந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் பலர், கடலில் விரித்திருந்த தங்கள் வலைகளைக்கூட எடுக்காமல் கரை திரும்பியதாகத் தெரிவித்தனர்.

தங்களது பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE