நீதிமன்ற அவமதிப்பில் கல்வி அலுவலருக்கு காலையில் விதிக்கப்பட்ட தண்டனை, மாலையில் நிறுத்தி வைப்பு

By கி.மகாராஜன் 


மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலருக்கு காலையில் தனி நீதிபதி வழங்கிய 4 வார சிறைத் தண்டனையை மாலையில் உயர் நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்தது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜான்சிராணி. பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்தார். இவரது பணி நியமனத்தை அங்கீகரித்து பதவி உயர்வு மற்றும் பணப்பலன் வழங்க உயர் நீதிமன்றம் 2019-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை 2020-ல் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடியானது.

மேல்முறையீடு தள்ளுபடியான பிறகும் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கல்வி அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ஜான்சிராணி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமணசாமி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவை இரண்டரை ஆண்டுகள் நிறைவேற்றாமல் இப்போது நிறைவேற்றியதாக கூறுவதை ஏற்க முடியாது. எனவே லட்சுமணசாமிக்கு 4 வாரம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைக்கக்கோரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் இன்று மாலையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு விசாரித்து தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE