அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சந்திரபாபு நாயுடு கைது: வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை குற்றம் நடந்திருந்தால்கூட, விசாரணை நடத்தி, சட்டப்படி அறிவிப்பாணை வழங்கி, முறைப்படி கைது செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து, முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை ஒரு தீவிரவாதி போல கைது செய்தது கண்டனத்துக்குரியது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியைக் கேள்விக்கு உள்ளாக்கியதற்காக, தாம் விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்று செப்டம்பர் 9ம் தேதி செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராயதுர்கம் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.

ஆந்திராவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் ஊழல் நடந்தததாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் சந்திரபாபு நாயுடுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு செப்டம்பர் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். ஒருவேளை குற்றம் நடந்திருந்தால்கூட, விசாரணை நடத்தி, சட்டப்படி அறிவிப்பாணை வழங்கி, முறைப்படி கைது செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து, முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை ஒரு தீவிரவாதி போல கைது செய்தது கண்டனத்துக்குரியது.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சிப் பொதுச் செயலாளருமான லோகேஷ், ராஜமகேந்திரவரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த வழக்கில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஊழல் நடந்ததாக கூறும் பணம் எங்கு போனது, யாருக்கு யார் வழங்கியது என்பதை எங்கும் சிஐடி கூறவில்லை. குஜராத் உட்பட 7 மாநிலங்களில் திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுகிறது. ஆந்திராவில் இது சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. 2.13 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்தோம். ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெகன்மோகன் மீது 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் ரூ.42 லட்சம் கோடி சொத்துக் குவிப்பு, நிதி முறைகேடு ஆகிய வழக்குகளில் கைதாகி, சிறையில் இருந்துவிட்டு பிணையில் வந்தவர். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையை அவர் எதிர்கொண்டு வருகிறார்" என்று கூறி உள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை கைது செய்து இருப்பதாக திருப்தி அடையலாம். ஆனால் நாற்பது ஆண்டு கால பொது வாழ்க்கையில் ஆந்திர மாநில மக்களுக்காக தன்னலமற்ற சேவையாற்றி வரும் சந்திரபாபு நாயுடு இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு முறியடித்து மீண்டு எழுவார் என்பதை காலம் உணர்த்தும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE