காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சரை சந்திக்க துரைமுருகன் தலைமையில் எம்.பி.க்கள் குழு

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள், மத்திய அமைச்சரை இன்று சந்தித்து, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி மனு அளிக்க உள்ளனர்.

காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு அளித்ததீர்ப்பின் அடிப்படையில், மாதாந்திர நீர் அளவு அட்டவணை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, செப்.14-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய 103.5 டிஎம்சியில் 38.4 டிஎம்சி மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இதுதொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவில் தமிழக அரசு முறையிட்டபோதும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசின் சார்பில் நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியில் நீர்திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி கோரிக்கை மனு அளிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு,இன்று மாலை மத்திய அமைச்சரைசந்தித்து கர்நாடக அரசு இதுவரைதமிழகத்துக்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி நேரில் சந்தித்து வலியுறுத்தும்படி அறிவுறுத்துகின்றனர்.

அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் மு.தம்பிதுரை, என்.சந்திரசேகரன், காங்கிரஸ் சார்பில் எஸ்.ஜோதிமணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.ஆர்.நடராசன், மதிமுக சார்பில் வைகோ, பாமக சார்பில் அன்புமணி, தமாகா சார்பில் ஜி.கே.வாசன், ஐயுஎம்எல் சார்பில் கே.நவாஸ்கனி, கொமதேக சார்பில் ஏ.கே.பி. சின்னராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE