அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் குறைப்பு? - அரசு பரிசீலிப்பதாக தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: 10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தைக் குறைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தியது. அதில், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப் பயன்பாட்டுக்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பொது பயன்பாட்டுக்கான மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டுக்கு ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் மீண்டும் பொதுசேவை பிரிவுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்ரூ.8.15 ஆகவும், நிரந்தரக் கட்டணம் கிலோ வாட்டுக்கு ரூ.102 ஆகவும் உயர்த்தப்பட்டன. இந்தக் கட்டண உயர்வுக்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக, குறைந்த எண்ணிக்கை வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் நடுத்தர மக்களும், தினசரி வேலைக்குச் செல்பவர்களும் வசித்து வருகின்றனர். பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுபயன்பாட்டுக்கான மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனதொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, 10-க்கும் குறைவான வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு மின்கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, ஒரு யூனிட் ரூ.4.60 என்ற கட்டணத்தில் வசூலிக்கப்படும் என தெரிகிறது. இதுதொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின்வாரியத்துடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE