சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி 

By கி.மகாராஜன் 


மதுரை: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸாரால் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீஸார் கடுமையாக தாக்கினர். இதனால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை கொலை வழக்கில் சிபிஐ போலீஸார் கைது செய்தனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட கைது செய்யப்பட்ட நாளில் இருந்து 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவில், கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். சிறையில் உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறேன். தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து கொலையான ஜெயரான் மனைவி ஜெயராணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை ஏற்று ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய சார்பு ஆய்வாளர் ரகுகணேஷின் ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை தினமும் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE