காஞ்சிபுரம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்.15) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாதாமாதம் அவர்களது வங்கிக் கணக்கிலேயே இத்தொகை செலுத்தப்படும் என்பதால், பயனாளிகளின் வங்கிக் கணக்கை சரிபார்க்கும் பணி கடந்த செப்.12-ம் தேதி முதல் நடந்தது. இதற்காக அவர்களது வங்கிக் கணக்குக்கு ரூ.1 அனுப்பப்பட்டது. அவர்களை அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்குக்கு பணம் வந்தடைந்த தகவலை உறுதி செய்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கையேடு வெளியீடு: இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஒரு கையேடு வழங்கப்பட்டது. அதில் மகளிர் உரிமைத் தொகையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி. எந்தெந்த சேமிப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். ஏடிஎம் பின் முதலியனவற்றை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
» மகளிர் உரிமைத் தொகை | பயனாளிகளின் வங்கிக் கணக்கை சரிபார்க்க ரூ.1-க்கு பதில் 10 பைசா அனுப்பி வைப்பு
மேலும் அதில் திட்டத்தின் இரண்டு நோக்கங்கள் என்னவென்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமை திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.
அடுத்தது ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது, முன்னதாக காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
திட்டம் தொடங்கப்படும் நாளான இன்று அனைத்து வங்கிக் கணக்குக்கும் ஒரே நேரத்தில் தொகையை விடுவித்தால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், அதை தவிர்க்கும் விதமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்றே ரூ.1,000 உரிமை தொகை விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.