கேரளத்தில் நிபா வைரஸ் பரவல்: புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் செப்.17 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கேரளத்தில் நிபா வைரஸ் பரவலால் புதுச்சேரி பிராந்தியமான மாஹேயில் நாளை (செப். 15) முதல் வரும் செப்.17 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் கேரள மாநிலம் அருகில் உள்ள புதுவையின் பிராந்தியமான மாஹேயிலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாஹே எல்லைகளில் போலீஸார் உரிய கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். எல்லைவிட்டு வருவோரிடம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது.

நிபா வைரஸ் பரவல் காரணமாக மாஹே நிர்வாக அலுவலர் சிவராஜ் மீனா இன்று இரவு வெளியிட்ட உத்தரவு: மாஹே அருகேயுள்ள கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவலால் பல பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள் மாஹேக்கு அருகேயுள்ளது. அங்கிருந்து பலரும் புதுச்சேரி பிராந்தியமான மாஹேக்கு கல்விக்கற்க வருகின்றனர்.

புதுச்சேரி பிராந்தியமான மாஹேயில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி புதுச்சேரி பிராந்தியமான மாஹேயில் நாளை (செப். 15) முதல் வரும் 17ம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்படுகிறது. தேர்வுகள் ஒத்திவைக்கப்படும். மாற்று தேதி அறிவிக்கப்படும். அதேபோல் அனைத்து அங்கன்வாடிகளும், மதராஸாக்களும் இந்நாட்களில் விடுமுறை விடப்படும். அதேபோல் அனைத்து டியூசன் சென்டர்கள், பயிற்சி வகுப்புகள் இக்காலத்தில் நடத்தக்கூடாது. பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும்.

கைகளை சுத்தம் செய்த கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை கண்காணிக்க வேண்டும்.

மருத்துவமனை, மார்க்கெட் சென்று வந்தாலும் சாப்பிடும் முன்பு, கழிவறையை பயன்படுத்திய பின்னர் கண்டிப்பாக கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE