இரு சிறுவர்கள் உள்பட 17 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

By கி.தனபாலன்


ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் 3 விசைப் படகுகளைக் கைப்பற்றி, அதிலிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அந்தோணி என்பவரின் விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புதன்கிழமை இரவு இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைப்பிடித்தனர். அந்தப் படகில் இருந்த அருண் (36), முருகன் (53), சகாய கிங்ஸ்டன் ராஜ் (37), இன்னாசி (46), பால முருகன் (48), காரல் மார்க்ஸ் (40), ரிமோட்டன் (16), மெல்டன் (16) ஆகிய 8 மீனவர்களை கைது செய்தனர்.

மேலும், அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கேசவன் (32), குமார் (38), முத்து (43), குணா (20), முருகேசன் (45) ஆகிய 5 மீனவர்கள் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான விசைப்படகில் அருண் (36), மருது (42), சுந்தரம் (35), செல்வராஜ் (38) ஆகிய 4 மீனவர்கள் என மொத்தம் 17 மீனவர்களை கைது செய்து, மூன்று படகுகளையும் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனையடுத்து, மீனவர்கள் 15 பேரும் விசாரணைக்கு பின்னர் வியாழக்கிழமை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டனர். சிறுவர்களான ரிமோட்டன், மெல்டன் ஆகியோரை அச்சுவேலி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

2023 ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை கடற்படையினர் 17 தமிழக விசைப்படகுகளை கைப்பற்றி, 110 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் கடிதம்: இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.14) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் (பதிவு எண்கள் IND-TN-10-MM-407, IND-TN-08-MM-214 and IND-TN-16-MM-2046) மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருகிறது.

மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மீனவர்ககளின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்புக்குள் சென்று விடுகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றம் அதிகரித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.

எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவித்திட ஏதுவாக, இலங்கை அரசுடன் உடனடியாகத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்திடவும், இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற தனது முந்தைய கோரிக்கையினை மீண்டும் இத்தருணத்தில் வலியுறுத்துவதாக, அந்த கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE