புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் 2 பெண்கள் உயிரிழப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: டெங்கு காய்ச்சலால் புதுச்சேரியில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். புதுச்சேரியில் தற்போது அதிகளவு காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலுவிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி தருமபுரியை சேர்ந்த மீனரோஷனி (வயது 28) என்ற பெண்மணி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தாக இயக்குனரகத்து தகவல் கிடைத்தவுடன் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி அந்த பெண்மணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 04.09.2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேல் சிகிச்சைக்காக 08.09.2023 அன்று கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அன்றே ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பலனின்றி 12.09.2023 மரணமடைந்தார்.

மேலும் புதுச்சேரி குருமாம்பேட்டை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்திரி கடந்த 10.09.2023 அன்று காய்ச்சலுக்காக தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சேர்க்கப்பட்டார்.தொடர் சிகிச்சை பலனின்றி 13.09.2023 டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தார்” என்று குறிப்பிட்டார்.

தடுக்க என்ன செய்யலாம்? - சுகாதாரத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசன் துவங்குவதற்கு முன்னர் மற்றும் பின்னர் நாட்டில் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்துவதன் மூலம் இந்த நோய்களை வராமலும் பரவாமலும் தடுக்கலாம்.

இந்த நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மிகவும் கடுமையாக போராடி வருகிறது. இதில் யானைக்கால் நோய் புதுச்சேரியில் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு நூற்றுக்கணக்கானோர் இத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை இப்பணிகளுக்கு சுகாதாரத்துறை பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் இப்பணிகளுக்கு வருவதில்லை. தற்போதைய சூழலுக்கு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து அதை செயல்படுத்த வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE