தமிழகத்தில் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வானிலை மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (செப்.14) முதல் செப்.18-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 5 செ.மீ. மழை பதிவானது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். செப்.14, 15 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE