பட்டுக்கோட்டை | 6-வது குழந்தை பெற வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் மரணம்: பிறந்த சிசுவும் உயிரிழந்தது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து 6-வது குழந்தையை பெற்ற பெண், அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். பிறந்த ஆண் சிசுவும் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(45). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (38). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான வசந்திக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கணவர் மற்றும் உறவினர்கள் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே வசந்தி உயிரிழந்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், வசந்தியின் சடலத்தை அவரது உறவினர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால், சந்தேகமடைந்த மருத்துவர்கள், இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, செந்தில் வீட்டுக்கு நேற்று காலை போலீஸார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் ரத்தக்கறையுடன் இருந்த ஒரு வாளியில் பிறந்த ஆண் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வசந்தி மற்றும் சிசுவின் உடல்களை போலீஸார், அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

வசந்திக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர். உரிய வசதிகள் இன்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாக வசந்தி உயிரிழந்தார் என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ள நிலையில், பிறந்த சிசு எப்படி உயிரிழந்தது என்பது தெரியவில்லை. இதையடுத்து, சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE