மேட்டூர்: மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் நண்பர்களிடம் சவால் விட்டு நீந்தி சென்றபோது, நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (35). பிளம்பர் தொழிலாளி. இவர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இவர் இன்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான திப்பம்பட்டி பகுதியில் குளிக்க சென்றார். நீர்த்தேக்க பகுதியில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று வருகிறேன் என நண்பர்களிடம் சவால் விட்டு, நீந்தி சென்றார். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் திடீரென நீரில் மூழ்கினார். அப்போது வேலு உடன் சென்ற நண்பர்கள் கூச்சலிட்டு சத்தமிட்டனர். அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடி வந்து பார்க்கும்போது வேலு நீரில் மூழ்கி விட்டார்.
இதையடுத்து, தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேட்டூர் தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு வேலு உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.