பட்டுக்கோட்டை அருகே தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் குழந்தையைக் கொன்று தானும் உயிரிழந்த சோகம்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில் 6-வதாக கர்ப்பந்தரித்ததால் வறுமை காரணமாக தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு குழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த பெண்.அதிக ரத்தப்போக்கு காரணமாக அவரும் இறந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (40). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், வசந்தி மீண்டும் கர்ப்பம் தரித்தார்.

ஏற்கெனவே 5 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் தனது கணவரின் வருமானம் போதாமல் வறுமை நிலையில் உள்ளதால் மேலும் ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவது முடியாது என்று கருதிய வசந்தி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரசவ வலி எடுத்தவுடன் தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு உயிருடன் பிறந்த அந்த குழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு அதனை வாலியில் வைத்து துணியால் மூடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பிரசவத்துக்குப் பின் வசந்திக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. நேரம் செல்லச் செல்லவே ரத்தப் போக்கு அதிகரித்த நிலையில், அருகில் இருந்தவர்களிடம் தனக்கு மயக்கம் வருவதாக வசந்தி கூறியுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, வசந்திக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதும் அருகில் ஒரு வாளியல் குழந்தை கொலை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வசந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வசந்தியை பரிசோதித்த டாக்டர்கள் வசந்தி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் வறுமையின் காரணமாக மேலும் ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்று எண்ணி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்று, தானும் உயிரை விட்ட பெண்ணின் இறப்பு சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE