“சனாதனம் என்பது இந்து மதத்தின் ஓர் அங்கம்” - ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: “சனாதனம் என்பது இந்து மதத்தின் ஓர் அங்கம்” என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கன்னியாகுமரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளேன். செப்.11-ல் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். பிரதமர் மோடி, அண்ணாவின் வழியை பின்பற்றுகிறார். சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றியது சரி என்றால் இந்தியாவை பாரத் என மாற்ற முடிவு செய்வதும் சரிதான். முதலமைச்சருக்கு கொடுப்பதுபோல், ஆளுநருக்கும் மரியாதை கொடுக்க வேண்டியது மரபு என்பதை தமிழக அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மரபை மீறிக்கொண்டிருக்கிறார்.

சனாதனம் என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது போல் கூறுகின்றனர். சனாதனம் என்பது இந்து மதத்தின் ஓர் அங்கம் தான். இந்து மதத்தில் காலத்தின் அடிப்படையில் தோன்றிய ஜாதிகள் பல்வேறு சமூக வெறுப்புகளை உருவாக்கியது என்பதை மறுக்க இயலாது. ஆனாலும் இந்து மதம் அதனை போதிக்கவில்லை. எல்லோரையும் சமமாக தான் நடத்த வேண்டும் எனக் கூறுகிறது. யாரும் எப்போதும் மரபை மீறக் கூடாது. நாம் பிறரை மதிக்க கற்றுக்கொண்டால் எல்லோரும் நம்மையும் மதிக்க கற்றுக்கொள்வார்கள்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE