தருமபுரி: “முடிச்சாயம் தோற்றத்தைதான் இளமையாக வைத்திருக்கும். ஆனால், புத்தக வாசிப்பு மனதையும் மூளையையும் இளமையாக வைத்திருக்கும்” என தருமபுரி புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
தருமபுரியில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் தருமபுரியில் புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்தாம் ஆண்டு புத்தகத் திருவிழா தருமபுரி வள்ளலார் திடலில் பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை நடைபெறும். அதேபோல தினமும் இரவு 7 மணி முதல் ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலம் வீதம் எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் ஆளுமைகள் உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
இந்த புத்தகத்தில் உள்ள தொடக்க விழா நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 9) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்று புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் புத்தக விற்பனை அரங்குகளையும் அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, இதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் அமைச்சர் பேசியது: “படிக்கின்ற காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி படித்து வெற்றி பெற்று உயர்ந்த இடத்துக்கு வருகின்றனர். ஆனால், நான் படிக்கின்ற காலத்தில் பெரும்பாலும் பாட புத்தகங்களை படிக்கவே மாட்டேன். மாறாக இலக்கியங்கள் வரலாற்று நாவல்கள் போன்ற நிறைய புத்தகங்களை தேடித்தேடி படித்தேன். அந்தப் படிப்பின் பலனாகத்தான் பொதுவாழ்வில் இந்த மேடையில் நிற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனவே முன்னேற்றத்திற்கு படிப்பு என்பது மிகவும் முக்கியம். படிக்கின்ற காலத்தில் நன்றாக படியுங்கள். பின்னர் உழைக்கின்ற காலத்தில் நன்றாக உழையுங்கள்.
» “3 மாதங்களாக சம்பளம் வரல...” - புதுக்கோட்டை ஊராட்சி செயலர்கள் விரக்தி
» போதை ஒழிப்புக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
எங்கே அதிகம் பேர் படிக்க தொடங்குகிறார்களோ அங்கே குற்றங்கள் குறைந்து விடும். முடிச்சாயம் நம் தோற்றத்தை மட்டும் தான் இளமையாக வைத்திருக்கும். ஆனால் வாசிப்பு பழக்கம் நம் மனதையும் மூளையையும் எப்போதும் இளமையாக வைத்திருக்கும். எனவே தொடர்ந்து புத்தகங்களை வாசியுங்கள். இது போன்ற பெரிய புத்தக திருவிழாக்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என பேசினார்.
பின்னர், புத்தகத் திருவிழாவை ஒட்டி பள்ளி மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்ட கட்டுரை கவிதை ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவ மாணவியருக்கும், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளிகளை சேர்ந்த 10 மாணவர்கள் மற்றும் 10 மாணவிகள் என 20 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி, மனோகரன், தகடூர் புத்தக பேரவை செயலாளர் மருத்துவர் செந்தில் தலைவர் சிசுபாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.