அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை செலுத்த ஊட்டி ஜிம்கானா கிளப்புக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த ஊட்டி ஜிம்கானா கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள 10.32 ஏக்கர் அரசு நிலம் கடந்த 1922-ம் ஆண்டு ஜிம்கானா கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் அந்த குத்தகைக்காலம் நீட்டிக்கப்பட்டதுடன் குத்தகை தொகையும் மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில், கிளப் நிர்வாகம் பாக்கி வைத்திருந்த தொகையை செலுத்தவும், குத்தகை தொகையை மாற்றியமைத்தும் கடந்த 2011-ம் ஆண்டு வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்தார். இதை எதிர்த்து கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கிளப் நிர்வாகம் பாக்கி வைத்துள்ள குத்தகை பாக்கியை செலுத்தக்கோரி வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை. நடப்பாண்டு ஜூன் வரை பாக்கி வைத்துள்ள ரூ.31.16 கோடியை கிளப் நிர்வாகம் ஒரு மாதத்தில் அரசுக்கு செலுத்த வேண்டும். தவறினால் உடனடியாக கிளப்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பாக்கித் தொகையையும் வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE