சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இணையதளத்தை நகர ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நகர ஊரமைப்பு இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், கடந்த 2016, அக்.20 அல்லது அதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைமற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்தாண்டு பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்தஇறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.