ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் விருந்து: முதல்வர் இன்று டெல்லி பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு 2 நாள் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதையொட்டி, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜி20 மாநாட்டையொட்டி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சிறப்பு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்குமாறு முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருந்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலுவும் உடன் செல்கிறார். டெல்லியில் முதல்வரை, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் எம்.பி.க்கள் வரவேற்கின்றனர்.

குடியரசுத் தலைவர் இன்று இரவு அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE