தருமபுரி | ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபடி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி அருகே இன்று மாலை(செப்டம்பர்-8) ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 2 இளைஞர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

தருமபுரி அடுத்த மிட்டாதின்னஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமசுந்தரம் மகன் தனுஷ்(21). அதே பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் பசவராஜ்(22). நண்பர்களான இருவரும் இன்று மாலை தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில், இழுவைத் திறன் அதிகம் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள், ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபடி சென்றுள்ளனர். ஒட்டப்பட்டியைக் கடந்து எர்ரப்பட்டி பகுதியில் பயணித்தபோது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், தனுஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பசவராஜ் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE