சென்னை: தேர்தல் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்
படப்பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கடந்த 4-ம் தேதி சென்னை திரும்பினார். நேற்று முன்தினம் கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்துப் பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடந்த இச்சந்திப்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கமல் பேசியதாவது: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 200 நாட்களே உள்ளன. இதனால் தேர்தலுக்கான பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
அனைத்து நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்ட வேலையைத் திறம்பட செய்து முடிக்க வேண்டும். தங்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.