நாங்குநேரி அரசுப் பள்ளி சுவரில் அவதூறாக எழுதிய 4 மாணவர்கள் கைது

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி சுவற்றில் சாதி வன்மத்தோடு அவதூறான வாசகங்களை எழுதிய 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

நாங்குநேரியில் பள்ளி மாணவரையும், அவரது தங்கையையும், சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் நாங்குநேரியிலுள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் சாதிய வன்மத்தோடு வகுப்பறை சுவற்றில் அவதூறான வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாங்குநேரி டிஎஸ்பி ராஜு, ஆய்வாளர் ஆதம் அலி மற்றும் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டு, அவதூறாக சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களை அழித்தனர். மேலும் இது குறித்து மாணவர்களிடையே விசாரணை நடத்தினர். அவதூறாக வாசகங்களை எழுதிய 4 மாணவர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் திருநெல்வேலியிலுள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

நாங்குநேரியில் வீடு புகுந்து தாக்கப்பட்ட மாணவர் படித்த வள்ளியூர் பள்ளிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. என்.சிலம்பரசன் சென்றார். அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், “மாணவர்கள் சாதி அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் நாங்குநேரி அரசுப் பள்ளியில் மாணவர்கள் சிலர் சாதி வன்மத்துடன் அவதூறாக வாசகங்களை எழுதிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE