அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி யார்? - செப்.14ல் ஐகோர்ட் முடிவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவு செய்வதற்காக செப்டம்பர் 14-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, "விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது தொடர்பாக உயர் நீதிமன்ற நிர்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறியுள்ளதால், வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையை சேர்த்திருக்க வேண்டும். மேலும், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம் தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் இருந்ததை கருத்தில் கொள்ளாமல், முன் முடிவெடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார். எனவே, இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்" என்று வாதிட்டார்.

அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் முன் வைத்த வாதத்தையே வலியுறுத்தினார். மேலும் அவர், “வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உயர் நீதிமன்ற நிர்வாக முடிவுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை" எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து எடுத்த இந்த வழக்கை தானே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து அடுத்த வாரம் முடிவெடுப்பதாகக் கூறி, விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE