பெருமாள் கோயில்களுக்கு ஒருநாள் சுற்றுலா - புரட்டாசி மாதத்தையொட்டி தமிழக சுற்றுலாத் துறை ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: புரட்டாசி மாதத்தையொட்டி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் திவ்யதேசப் பெருமாள் கோயில்களுக்கு ஒருநாள் சுற்றுலாவுக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள், சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில்களுக்கு சென்றுவரும் வகையில் ஒருநாள் சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மதுரை மாவட்டத்தில் கள்ளழகர், ஒத்தகடை யோக நரசிம்மர், திருமோகூர் காளமேக பெருமாள், திருகோஷ்டியூர் சவும்யநாராயண பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய கோயில்களுக்கும், திருச்சி மாவட்டத்தில் உறையூர் அழகிய மணவாள பெருமாள், ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி, உத்தமர் கோயில் புருஷோத்தம பெருமாள், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள், தான்தோன்றி மலைகல்யாண வெங்கடராம கோயில்களுக்கும்,

தஞ்சாவூரில் திருகண்டியூர் சாபவிமோச்சன பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள், நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள், திருச்சேறை சாரநாத பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி, வடுவூர் கோதண்டராமர் கோயில்களுக்கு சென்று வரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்தும், சென்னையில் வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் இருந்தும் காலை 8.30 மணிக்குபேருந்து புறப்படும். மேலும் விவரங்களை 180042531111 தொலைபேசி எண் மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களிலும், www.ttdconline.com என்ற இணையதளம் மூலமாகவும் அறியலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE