சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்ட களப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து சுகாதார துணை இயக்குநர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஜன்ஆரோக்ய யோஜனா (பிஎம்ஜேஏஒய்) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழகத்தில் அரசு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களைஇணையவழியே பதிவேற்றுவதிலும், அடையாள அட்டைகளை அச்சிட்டு, விநியோகிக்கும் பணிகளிலும் தனியார் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கிராம சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதார களப் பணியாளர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். சுகாதாரகளப் பணியாளர்கள் தன்னார்வமாக முன்வந்து இணையவழியில் தகவல்களைப் பதிவேற்றுவதி லும், அடையாள அட்டைகளை விநியோகிப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் படும்.
அதன்படி, இணையப் பதிவுஒன்றுக்கு தலா ரூ.5-ம், அடையாள அட்டை விநியோகத்துக்கு தலா ரூ.3-ம் ஊக்கத்தொகையாக நேரடியாக வழங்கப்படும். விருப்பமுள்ள களப் பணியாளர்கள் தங்களது விவரங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பலாம்.